கோபக்கார அரக்கன்
முன்னொரு காலத்தில், கோபக்கார அரக்கன் ஒருவன் இருந்தான். சின்னச்சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படுவான் அவன். கோபம் வந்தால் என்ன செய்வான் என்று அவனுக்கே தெரியாது.
ஒருநாள், அவன் தனக்கென ஒரு அழகான மரவீடு கட்டிக்கொள்ள ஆசைப்பட்டான். வீடு கட்ட, அந்தக் காட்டிலே உயரமாக வளர்ந்திருந்த மரத்தைத் தேர்ந்தெடுத்தான். பத்து நாட்கள் கடினமாக உழைத்து வீட்டைக் கட்டி, பதினோராம் நாள், வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்தான். அப்போது பறந்து கொண்டிருந்த புறா ஒன்று எச்சமிட, அது அவன் தோள் மேலே விழுந்தது.
அதனால் கோபம் கொண்ட அந்த அரக்கன், புறாவைத் தேடித் துரத்தினான். வெகுநேரம் தேடித் திரிந்த பின், ஒரு மரத்தின் மீது அந்தப் புறா அமர்ந்திருப்பது கண்டான். கண்டதும் அரக்கனுக்கு கோபம் கண்ணை மறைக்க, புறா அமர்ந்திருப்பது அவன் வீடு கட்டிய மரம் தான் என்பது தெரியாமல் அதை வெட்டி வீழ்த்தினான். கட்டிய வீடும் சரிந்தது.
கண்மூடித்தனமானக் கோபம் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.
---
'365 Moral Stories' என்ற நூலிலிருந்து தெரிந்த ஒரு கதையின் தமிழாக்கம்.



