கிறிஸ்து இயேசுவுக்கு உட்பட்டவர்களாயிருப்பதும், மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடப்பதும் இருவேறு நிலை அல்ல. இரண்டும் ஒரே நிலையை (நபரை) குறிப்பதாகும். அதாவது கிறிஸ்து இயேசுவுக்கு உட்பட்டவர்களாயிருப்பதே மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடப்பதாகும். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடப்பது அடிப்படையில் செயல் அல்ல. இது ஒரு விசுவாசியின் நிலை அடிப்படையிலான உண்மை. இதையும் நாம் விசுவாசிக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் விருப்பம். அதையும் இதே அதிகாரத்தில் பவுல் தெளிவுபடுத்துகிறார்.
மாம்சத்தின் படி வாழ்தல் என்பது மாம்சத்தின் விருப்பத்தை நிறைவேறுதல் என்கிற பொருளை மட்டும் உடையதாக இராமல் மாசத்தின் கட்டுப்பாட்டில் வாழ்தல் என்கிற பொருளையும் உடையதாக இருக்கிறது. அதே விதமாகத்தான் ஆவியின் படி வாழ்தல் என்பது ஆவியானவரின் விருப்பத்தை நிறைவேறுதல் என்பது மட்டுமல்ல, ஆவியானவரின் கட்டுப்பாட்டில் வாழ்தல் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
கிறிஸ்தவர்களான நாம் ஏற்கனவே ஆவிக்குட்பட்டவர்களாக இருக்கிறோம். எனவே மாம்சத்தின்படி அல்ல ஆவியிபடி வாழ்வதே நமது அழைப்பு.



