கலைஞரின் தொழில் புரட்சி
1969ல் அண்ணா மறைந்த பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக்காக்கும் பெரும் சுமை கலைஞருக்கு 45 வயதிலேயே ஏற்பட்டது. ஒரு கட்சியின் தலைவராக 50 ஆண்டுகள் தொடர்ந்து இருந்த சாதனையிலும் உலக நாடுகளின் தலைவர்களைக் கலைஞர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
பெரியார், அண்ணா ஆகிய இரு பெரும் தலைவர்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து செயல்பட்ட திராவிட இயக்கத் தலைவர்களில் முதன்மையானவராக கலைஞர் விளங்குகிறார்.
62 ஆண்டுகள் சட்டமன்றப் பணி 50 ஆண்டுகள் கட்சியின் தலைவர் பணி, 5 முறை முதலமைச்சர் பணி, 13 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்த கலைஞரின் சாதனைகள் எண்ணிலடங்கா. இத்தனை பணிகளுக்கிடையே அவர் எழுத்துப் பணியையும் விடவே இல்லை. நாடகம், திரைப்படம், இலக்கியம், ஊடகம், சின்னத்திரை, அரசியல் களம் என அவர் தொடாத் துறையே இல்லை எனலாம்.
1969ல் மத்திய - மாநில உறவுகளை ஆய்வதற்கு நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து, அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று 1973ல் மாநில சுயாட்சித் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் இயற்றினார். இந்தத் தீர்மானத்தை அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி மாநில உரிமைகளுக்கு வித்திட்ட முதல் முதல்வர் கலைஞர் என்பது அவர் ஆற்றிய அரசியல் பணிகளில் முதன்மையானது என்று குறிப்பிடலாம். இன்று மாநிலங்களுக்கு உரிமைகள் வேண்டும் என்று ஆந்திரம் தொடங்கி தில்லி வரை முழக்கங்களைக் கேட்க முடிகிறது. இதற்கு முன்னோடி கலைஞர்தான்.



