யூதர்கள் மூலமாக கடவுளின் வார்த்தை கொடுக்கப்பட்டது என்பதை சிலர் விசுவாசிக்க வில்லை என்பதனால், அது கடவுளின் உண்மைதன்மையை பாதிக்குமா? இல்லை. கடவுள் ஆபிரகாமை தெரிந்தெடுத்த நோக்கங்களில் ஒன்று ஆபிரகாமின் வழித்தோன்றல்களை ஒரு இனமாக உருவாக்கி அவர்கள் மூலமாக உலகிற்கு தன்னை வெளிப்படுத்துவது. உண்மையான கடவுளைப்பற்றி உலகிற்கு சாட்சி பகரக்கூடிய அழைப்பு அவர்களுக்கு இருந்தது. ஆனால் யூதர்களுடைய சரித்திரத்தை வேதாகமத்தில் கவனித்து பார்த்தால் அவர்கள் ஒருபோதும் கடவுளுக்கு உண்மையாக இருந்தது இல்லை. எப்போதும் கடவுளை புறக்கணித்துக்கொண்டே இருந்தனர். அவர்கள் உண்மையற்றவர்களாக போய்விட்டார்கள் என்பதனால் கடவுள் தன்னுடைய உண்மைத்தன்மையிலிருந்து பின்வாங்கி விட்டாரா? அதுதான் இல்லை. கடவுள் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை. யூதர்களுடைய புறக்கணிப்புக்கு மத்தியிலும் யூதர்களுடைய அவிசுவாசத்துக்கு மத்தியிலும் யூதர்களின் தொடர் உண்மை தன்மை இன்ன்மையின் மத்தியிலும் கடவுள் உண்மையுள்ளவராகவே இருந்தார். யூதர்கள் மூலமாகத்தான் தன்னுடைய வார்த்தையை உலகிற்கு கொடுப்பேன் என்று தீர்மானித்த நிலையிலிருந்து மாறவே இல்லை.



