Kathai Solli
Kathai Solli
Kathai Solli
எளியவர்களால் உதவ முடியும் - முல்லை முத்தையா - ஒரு நிமிடக்கதை
1 minutes Posted Dec 10, 2020 at 12:36 am.
0:00
1:16
Download MP3
Show notes

எளியவர்களால் உதவ முடியும்


செடி, கொடி, மரங்கள் அடர்ந்த பெரிய காடு.

அங்கு ஆண் சிங்கம் ஒன்று அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது.

அப்போது சுண்டெலி ஒன்று, தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தின் மேல் ஏறி விளையாடியது.

அதனால் சிங்கத்தின் தூக்கம் கலைந்தது. சினம் பொங்கியது, கண்கள் சிவந்தன. சுண்டெலியைக் கடுமையாகப் பார்த்தது.

சுண்டெலி அஞ்சி நடுங்கியது. சிங்கத்தின் காலடியில் வீழ்ந்து “வனராஜனே! என்னை மன்னித்து விடு, எப்போதாவது நன்றி மறவாமல், உனக்கு உதவி செய்வேன்” என்று மன்றாடியது.

சிங்கம் ஏளனமாகச் சிரித்து, “நீயா எனக்கு உதவி செய்யப் போகிறாய்? ஓடிப்போ” என்று கூறி, சுண்டெலியை மன்னித்தது.

பல நாட்களுக்குப் பிறகு, வேடர்கள் விரித்த வலையில் அந்தச் சிங்கம் அகப்பட்டுக் கொண்டது. தப்பிக்க வழி இல்லாமல் தவித்தது. அந்தக் காடே அதிரும்படி முழக்கமிட்டது.

இதர மிருகங்கள் எல்லாம் பயந்து ஓடி மறைந்தன.

சிங்கத்தின் குரலைக் கேட்ட சுண்டெலி ஓடி வந்து பார்த்தது. சிங்கத்தின் பரிதாப நிலையைக் கண்டு வருந்தியது.

“வனராஜனே! முன்பு நீ மன்னித்ததை நான் மறக்கவில்லை; என்னுடைய பற்களால் சிறுகச் சிறுகக் கடித்து, வலையைத் துண்டித்து விடுகிறேன். நீ உடனே வலையிலிருந்து வெளியேறி விடலாம்” என்று கூறி, வலையைக் கடித்து, துண்டித்து விட்டது சுண்டெலி.

சுண்டெலி தனக்கு உதவி, உயிர் பிழைக்கச் செய்ததை சிங்கம், நன்றிப் பெருக்கோடு சுண்டெலியைப் பாராட்டியது. முன்பு, ஏளனமாக நினைத்ததை எண்ணி வருந்தியது.

---

‘மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்’ என்ற தொகுப்பில் முல்லை முத்தையா அவர்கள் எழுதிய கதை இது.