Kathai Solli
Kathai Solli
Kathai Solli
நிலத்தில் கிடைத்த மோதிரம் - முல்லை முத்தையா - ஒரு நிமிடக் கதை
56 seconds Posted Dec 8, 2020 at 12:25 am.
0:00
0:56
Download MP3
Show notes

நிலத்தில் கிடைத்த மோதிரம்


ஒரு பண்ணையாருக்குச் சொந்தமான நிலத்தில் கூலிக்காக ஒரு ஏழை உழுது பயிரிட்டு வந்தான்.

வழக்கம் போல விவசாயி உழுது கொண்டிருக்கும்போது, ஒரு தங்க மோதிரத்தைக் கண்டு எடுத்தான்.

வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்து விட்டான். தான் கண்டு எடுத்த மோதிரத்தை தன் மனைவியிடம் காட்டினான்.

அதைப் பார்த்ததும் அவன் மனைவி, தனக்குக் காதோலை செய்து போட்டுக் கொள்ள ஆசைப்பட்டாள்.

“நிலம் பண்ணையாருடையது, நான் கூலிக்காகவே உழுகிறேன்; நிலத்தில் கிடைப்பது அவரைச் சேர்ந்தது. நாம் எடுத்துக்கொள்வது அவருக்குத் துரோகம் செய்வதாகும்” என்றான் அவன்.

கணவன் கூறியது மனைவிக்குத் திருப்தி அளிக்கவில்லை.

“பண்ணையாருக்கு எப்படி தெரியும்? அவர் வந்து பார்த்தாரா?” என்று வாதாடினாள் மனைவி. இருவருக்கும் இரவு முழுதும் தூக்கம் வரவில்லை.

“பண்ணையார் வந்து பார்க்கவில்லை தான். ஆனாலும், என் மனசாட்சி உறுத்துகிறது” என்று கூறிவிட்டு, காலையில் எழுந்து பண்ணையாரிடம் சென்று, மோதிரத்தைக் கொடுத்து விவரத்தைக் கூறினான் அவன்.

பண்ணையார், விவசாயியின் நேர்மையைப் பாராட்டி, அதை அவனுக்கே பரிசாகக் கொடுத்துவிட்டார்.

---

முல்லை முத்தையா அவர்கள் எழுதி, ‘மாணவர் மாணவியருக்கு நீதிக்கதைகள்’ என்ற தொகுப்பில் இக்கதை வெளியானது.